சென்னை: உள்ளாட்சி தேர்தலின்போது திமுக பிரமுகரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், திருச்சியில் தங்கியிருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதித்திருந்தது. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யும் வகையில் 2022 மார்ச் 14ம் தேதி காவல் நிலையத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சென்று, காவல்துறை, அரசு மற்றும் முதல்வருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில், ஜெயக்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்த போது, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து ஜெயக்குமார் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. காவல் துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதற்கு மட்டும் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதற்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை எனக் கூறி வழக்கை ரத்து செய்ய காவல் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆதரவாளர்கள் எழுப்பிய அத்தனை கோஷங்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளதாக ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, காவல் நிலையத்துக்கு திட்டமிட்டு ஆதரவாளர்களை கூட்டவில்லை என்பது தெரியவந்துள்ளதாலும் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளதால் அவருக்கு எதிரான வழக்கை ரத்து ெசய்து உத்தரவிடுகிறேன் என்றார்.