திருச்சி:காவல்துறை மற்றும் வருவாய்த்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் கைது செய்யப்பட வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வராயன்மலையில் சாராய உற்பத்தி தொடர் கதையாக நடக்கிறது. இதில் காவல்துறையில் பல கருப்பு ஆடுகள், வருவாய் துறையிலும் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
கடந்த 15 ஆண்டுகளாக அங்கே பணி செய்தவர்களின் விவரங்களை கண்டறிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசை பொறுத்தவரை கள்ளச்சாராயம் தமிழகத்தில் இருக்க கூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது. கடந்த ஆட்சி காலத்திலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அப்போது எடப்பாடி ராஜினாமா செய்திருந்தால் எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என எண்ணி பார்க்க வேண்டும். அதானி துறைமுகத்தில் இருந்து தான் தமிழகத்திற்கு போதை மற்றும் கஞ்சா பொருட்கள் வருகிறது. குஜராத்தில் இருந்து அம்பு ஏவப்படுகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.