புதுடெல்லி: நியூஸ்கிளிக் செய்தி இணையதளம் பணம் பெற்று கொண்டு சீனாவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அதன் தலைமை செய்தி ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் அமித் சக்ரவர்த்தியை உபா தடை சட்டத்தின் கீழ் கடந்த செவ்வாய்கிழமை கைது செய்த டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக டெல்லியில் உள்பட பல்வேறு மாநிலங்களில் 88 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் 9 பெண் ஊழியர்கள் உள்பட 46 ஊழியர்களிடமும் சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பத்திரிகையாளர் அபிசார் சர்மாவிடம் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் நேற்றும் விசாரணை நடத்தினர்.