ஜெய்ப்பூர்: காவல்துறை உள்ளிட்ட பணிகளில் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ராஜஸ்தான், அருணாச்சல பிரதேச மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு அரசு பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு அறிமுகப்படுத்தியது.
கார்கில் போர் வெற்றியின் 25ம் ஆண்டு தினத்தையொட்டி, ராஜஸ்தான், அருணாச்சல் பிரதேச மாநில அரசுகள் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை நேற்று அறிவித்துள்ளன. ராஜஸ்தானில் சிறை, வனக்காவலர்கள், மாநில போலீஸ் பணிகளிலும், அருணாச்சலில் காவல்துறை, தீயணைப்பு துறையிலும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘விரைவில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்வோம்’’ என கூறி உள்ளார்.