இதுகுறித்து கலெக்டர், எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். எனது கணவர் உயிரிழந்ததும் அவரது உடலை அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை செய்து, தகனம் செய்யுமாறு போலீசார் மிரட்டியதாக மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராஜாவின் உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்து அதன் அறிக்கை அளிக்கவும், காவல்நிலையத்தில் ராஜா விசாரணைக்கு சென்றது, வெளிவந்தது முதல் பதிவான சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்கவும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று காலை 7 மணியளவில் கே.கே ரோட்டில் உள்ள இடுகாட்டில் கலெக்டர் பழனி, எஸ்பி தீபக்சிவாச், மாஜிஸ்திரேட் ராதிகா முன்னிலையில் ராஜாவின் உடல் ேதாண்டி எடுக்கப்பட்டது.
அப்போது அவரது மனைவி அஞ்சு மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் சதாசிவம், மதுரை டாக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட மருத்துவகுழுவினர் ராஜவின் உடலை மறு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடலில் காயங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்று முழுவதுமாக ஸ்கேன் செய்யப்பட்டது. தொடர்ந்து உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. இதுபற்றி மாஜிஸ்திரேட் ராதிகா மருத்துவகுழுவினரிடம் அறிக்கை பெற்றார். பிற்பகலுக்கு பிறகு ராஜாவின் உடல் மீண்டும் அதே இடத்தில் புதைக்கப்பட்டது. மறு பிரேத அறிக்கையை மருத்துவக்குழுவினர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். அதன்பிறகுதான் அவர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தாரா? என்பது தெரியவரும்.