Monday, October 7, 2024
Home » காவல்துறை சார்பில் ரூ.56 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவல்துறை சார்பில் ரூ.56 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Neethimaan


சென்னை: காவல்துறை, தீயணைப்பு துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் அரசு செயல்படுத்தி வருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற இம்மூன்று ஆண்டு காலத்தில் காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள் காவல் துறையின் பணிகள் சிறக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை, ரூ.461.62 கோடி செலவில் 2786 காவலர் குடியிருப்புகள், ரூ.55.04 கோடி செலவில் 47 காவல் நிலையக் கட்டடங்கள், ரூ.98.91 கோடி செலவில் 16 காவல்துறை இதரக் கட்டடங்கள் மற்றும் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பிலான 253 குடியிருப்புகள் ஆகியவை காவல்துறையினரின் மேம்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் காவல்துறை சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள கட்டடங்களின் விவரங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவிலில் 22 கோடியே 8 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 128 காவலர் குடியிருப்புகள், புதுக்கோட்டை மாவட்டம் – மழையூரில் 5 கோடியே 48 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 29 காவலர் குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை மாவட்டம் – பள்ளத்தூரில் 2 கோடியே 24 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 காவலர் குடியிருப்புகள், என 29 கோடியே 81 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 169 காவலர் குடியிருப்புகள்; இராமநாதபுரம் மாவட்டம் – இராமேஸ்வரம் துறைமுகம் பகுதியில் 99 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் மற்றும் திருப்பூர் மாவட்டம் – வீரபாண்டியில் 1 கோடியே 97 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம், என 2 கோடியே 97 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல் நிலையக் கட்டடங்கள்;

செங்கல்பட்டு மாவட்டம் – ஊனமாஞ்சேரி, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக வளாகத்தில் 10 கோடியே 27 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த இணையதள குற்ற ஆய்வக வளாகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் – திருப்பூரில் 13 கோடியே 20 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகம், என 23 கோடியே 48 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல் துறைக் கட்டடங்கள்; என மொத்தம் 56 கோடியே 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 169 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள் மற்றும் 2 காவல் துறை கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது, “காக்கும் பணி எங்கள் பணி” என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் போன்றவைகளிலிருந்தும், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகளிலிருந்தும் மக்களை காப்பதும், அவசர உதவி புரிவதும் இத்துறையின் முக்கிய பணியாகும். இத்துறையின் செயல்திறனை மேம்படுத்திட புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் கட்டித் தருதல், பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தருதல், பல்வேறு நவீன கருவிகள் மற்றும் தீயணைப்பு ஊர்திகளை வழங்குதல் போன்ற பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற இம்மூன்று ஆண்டு காலத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால், ரூ.30.94 கோடி செலவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 181 குடியிருப்புகள், ரூ.35.93 கோடி செலவில் 22 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள், ரூ.2.45 கோடி செலவில் 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் கட்டடங்கள், என மொத்தம் ரூ.69.32 கோடி செலவிலான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள கட்டடங்களின் விவரங்கள்
தேனி மாவட்டம் – போடிநாயக்கனூரில் 2 கோடியே 12 லட்சத்து 34 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 10 குடியிருப்புகள்; சென்னை மாவட்டம், தியாகராய நகர் மற்றும் மணலி ஆகிய இடங்களில் 6 கோடியே 80 இலட்சத்து 16 ஆயிரம் செலவிலும், மதுரை மாவட்டம் – மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளிக்குடி ஆகிய இடங்களில் 2 கோடியே 71 இலட்சத்து 97 ஆயிரம் செலவிலும், நாமக்கல் மாவட்டம் – கொல்லிமலையில் 1 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் செலவிலும், தஞ்சாவூர் மாவட்டம் – திருவையாறு மற்றும் திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் 5 கோடியே 34 இலட்சத்து 11 ஆயிரம் செலவிலும் கட்டப்பட்டுள்ள 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள்; என மொத்தம் 18 கோடியே 78 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தடய அறிவியல் மரபணு ஆய்வகப் பிரிவுக் கட்டடத்தை திறந்து வைத்தல்
தடய அறிவியல் துறைக்கு தஞ்சாவூரில் 3 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தடய அறிவியல் மரபணு ஆய்வகப் பிரிவுக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ், தடய அறிவியல் துறை இயக்குநர் (பொறுப்பு) முனைவர் வி. சிவப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

16 − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi