நேற்று முன்தினம் பெங்களூருவை சேர்ந்த ராஜேஷ் என்ற பக்தர் உள்பட 22 பேர் சபரிமலைக்கு வந்தனர். ராஜேஷ் தனது நண்பரின் 6 வயது மகனுடன் 18ம் படி ஏறிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் சீக்கிரமாக ஏறும்படி கூறி அவரை சரமாரியாக தாக்கினார். இதில் அவரது முதுகில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சன்னிதானம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அறிந்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர், அதிகாரிகள் ஆகியோர் சன்னிதானம் எஸ்பி ஆனந்திடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பக்தரை தாக்கிய போலீஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். இது குறித்து விசாரணை நடத்த கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார்.