சென்னை: விஷச் சாராய மரணங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நடிகர்கள் விஜய், சூர்யாவுக்கு டாக்டர் ரவீந்திரநாத் கோரிக்கை வைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராய சம்பவத்தில் இதுவரை 55 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,நடிகர்கள் விஜய்,சூர்யா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, மதுப் பழக்கத்துக்கு காரணமான சமூக, பொருளாதார காரணிகளை ஒழித்துக் கட்டாமல் மக்களை மதுவில் இருந்து மீட்க முடியாது. தங்கள் திரைப்படங்களில் மதுவுக்கு எதிரான கருத்துகளை விஜய், சூர்யா தீவிரமாக பரப்ப வேண்டும். மது அருந்தும் காட்சிகளை தங்கள் படங்களில் தவிர்க்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மதுப் பழக்கத்துக்கு எதிரான பண்பாட்டு போராட்டங்களை விஜய், சூர்யா முன்னெடுக்க வேண்டும். வெறும் கண்டனங்களை தாண்டி சமூகக் கடமையை தங்கள் படங்கள் மூலம் செய்ய வேண்டும் என டாக்டர் ரவீந்திரநாத் கோரிக்கை வைத்துள்ளார்.