இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மீனவ கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட 11 பேரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை நேற்று வந்தபோது 11 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 26ம் தேதி மாலை 5 மணி வரை 3 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி புஷ்பராணி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து 11 பேரையும் சிபிசிஐடி போலீசார் அழைத்துச் சென்று தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷச்சாராயம் கடத்தலுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்தும், உடந்தையாக இருந்த காவல்துறை, வருவாய்த்துறையினர் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் மேலும் சிலர் கைதாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.