Saturday, October 5, 2024
Home » கவிஞர் மு.மேத்தா, பின்னணி பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கவிஞர் மு.மேத்தா, பின்னணி பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

by Karthik Yash

சென்னை: கலைஞர் நூற்றாண்டு நினைவினை போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணி பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களை போற்றி பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், கலைஞரின் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நினைவு பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துகின்ற வகையில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையின்படி 2022ம் ஆண்டிற்கான “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட ஆரூர்தாஸ்-க்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டது.

அதேபோல், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாக பெண்மையை போற்றும் வகையில் இந்தாண்டு கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கி சிறப்பித்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 11ம் தேதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, திரையுலகில் 20,000-க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், “தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்றும், “மெல்லிசை அரசி” என்றும் பாராட்டப்பட்டவருமான திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலா-விற்கும், தமிழ் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு.மேத்தாவுக்கும், 2023ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்தவகையில், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கவிஞர் மு. மேத்தாவுக்கும், பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கும் 2023ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், நினைவு பரிசும் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், தலைமை செயலாளர் முருகானந்தம், செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், இயக்குநர் வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* விருது வழங்கியதில் மகிழ்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: தனது திரைவசனங்கள் மூலமாக தமிழ்ச் சமூகத்துடன் உரையாடல் நிகழ்த்தி மாற்றங்களுக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது பெயரில் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்’ வழங்கப்பட்டன. முதலாமாண்டு விருதுகளை, தன் மயக்கும் குரலால் பல லட்சம் ரசிகர்களின் மனங்களில் குடியேறிவிட்ட ‘தென்னிந்தியாவின் இசைக்குயில்’ பி.சுசீலாவுக்கும் – வளமான எழுத்துகளால் கோர்க்கப்பட்ட வைரமாலையென கவிதைகள் படைத்திட்ட கவிஞர் மு.மேத்தாவுக்கும் 2023ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கியதில் நிரம்ப மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

10 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi