கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 30ம் தேதி வழங்கி கவுரவிக்கிறார்

சென்னை: கலைஞரின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3ம் நாளன்று வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் கடந்த 2022ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இத்துடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 11ம் தேதி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டு விருதுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன்படி, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையிலான குழு கூடி, தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், கலைஞரால் பாராட்டப்பட்டவருமான கவிஞர் மு.மேத்தாவுக்கும், திரையுலகில் 25,000க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், தென்னிந்தியாவின் இசைக்குயில் என்றும்,

மெல்லிசை அரசி என்றும் பாராட்டப்பட்டுள்ளவரும், கலைஞரால் பல நிகழ்வுகளில் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசிலாவுக்கும் 2023ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கிடவும் பரிந்துரைத்துள்ளது. இந்த விருதுகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்.30ம் தேதி தலைமைச் செயலகத்தில் வழங்கிச் சிறப்பிக்கிறார் என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* கவிஞர் முகமது மேத்தா
கவிஞர் முகமது மேத்தா பெரியகுளத்தில் 1945 செப்.5ம் நாள் பிறந்தவர். தமிழ் மீது தணியாத பற்று உடையவர், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி மாணவர்களின் அன்பைப் பெற்றவர். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள், எனப் பல்வேறு நூல்களையும் படைத்து 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி தமது தனி முத்திரைகளைத் திறம்படப் பதித்தவர்.

அவர் எழுதிய, ஊர்வலம் எனும் கவிதை நூலுக்குத் தமிழ்நாடு அரசின் முதல் பரிசும், ஆகாயத்துக்கு அடுத்த வீடு எனும் கவிதை நூலுக்கு, சாகித்ய அகாடமி விருதும் பெற்ற பெருமைக்குரியவர். தம் வாழ்நாள் முழுதும் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் கவிஞர் மு.மேத்தாவை போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படுகிறது.

* இசைக்குயில் பி.சுசீலா
இசைக்குயில் பி.சுசீலா 1935 நவ.13ம் நாள் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர். இசை மீது கொண்டிருந்த அதீத பற்றின் காரணமாக ஆந்திராவின் புகழ்பெற்ற இசைமேதை துவாரம் வெங்கிடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்று 1950ம் ஆண்டு சென்னை வானொலியில் பாப்பா மலர் எனும் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். தேனினும் இனிய தனது குரலால் அனைவரையும் கவர்ந்து, ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலான தனது இசைப் பயணத்தில், 25,000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தொடர்ந்து பாடி சாதனைகள் படைத்தவர்.

இசையுலகத்தினராலும், ரசிகர்களாலும் இசைக்குயில் என்றும், மெல்லிசை அரசி என்றும், கான கோகிலா என்றும் பாராட்டப்பட்டவர் அவர். சிறந்த பின்னணிப் பாடகி எனத் தமிழ்நாடு அரசின் விருதுகளையும், ஒன்றிய அரசின் விருதுகளையும் பலமுறை பெற்றுள்ளதோடு, இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியமைக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்ற பெருமைக்குரியவர். இசைக்குத் தன்னையே அர்ப்பணித்து இன்றளவும் தனித்துவமாய் விளங்கிடும் அம்மையார் பி.சுசிலாவை பெருமைப்படுத்தும் வகையில், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படுகிறது.

Related posts

ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது: மொத்தம் 239 வேட்பாளா்கள் போட்டி

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரிப்பு

ஆந்திராவில் அனைத்து கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு முடிவு