சென்னை: இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நலனுக்காக பிரதமர் மோடி தொடர்ந்து பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரையாடினார். தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்தும், இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி, இலங்கை அதிபரை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழ் மக்கள் மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்தியா- இலங்கை உறவு, சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக ரூ.75 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் நலனுக்காக தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையே உள்ள கலாச்சார பாரம்பரியத்தை மீட்டு புதுப்பித்திருக்கும் பிரதமர் மோடிக்கு, தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பாஜ சார்பாகவும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.