புதுடெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு செல்ல உள்ளார். 18வது மக்களவை தேர்தலில் 240 இடங்களை வென்று பாஜ கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில், மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ளாளர். இந்நிலையில் வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போர் நீடிக்கும் நிலையில் ரஷ்ய அதிபர் புடினின் அழைப்பை ஏற்று ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி, 8, 9 ஆகிய தேதிகளில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு, ஆஸ்திரியாவுக்கு அரசு முறை பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். கடந்த 41 ஆண்டுகளுக்கு பின் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் ஆஸ்திரிய பயணம் இது என இந்திய வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.