புதுடெல்லி: குடியரசு தலைவர் உரையை குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே, எதுவும் மாறாதது போல பிரதமர் மோடி பாசாங்கு செய்வதாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமர் மோடி அரசால் எழுதப்பட்ட குடியரசு தலைவரின் உரையை பார்க்கும்போது, 400க்கும் கூடுதலான இடங்கள் என்ற அவரது முழக்கத்தை நாட்டு மக்கள் நிராகரித்துவிட்டனர் . மோடியால் இத னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதனால் அவர் எதுவும் மாறவில்லை என்பது போல் பாசாங்கு செய்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால் மக்கள் மாற்றத்தை கேட்கிறார்கள். குடியரசு தலைவர் உரையில், நீட் பிரச்னைக்கு தீர்வு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூரில் வன்முறை, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், ரயில் விபத்துக்கள், ரயில்களில் பயணிகளின் அவலநிலை மற்றும் தலித்துக்கள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்றார்.