புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, இதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இதற்காக கடந்த 2020ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
கடமைப் பாதை சீரமைப்பு, பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டி வருகிறது. புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்நிலையில், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை வருகிற 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.