தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்திலான பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்காத மற்றும் தேர்ச்சிப்பெறாதவர்களுக்கான துணைத்தேர்வு கடந்த ஜூன் 19 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை 24-ம் தேதி(இன்று) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாதவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அந்தந்த மாவட்ட தேர்வுத் துறை அலுவலகத்தில் ஜூலை 27, 28-ம் தேதிகளில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உயிரியல் பாடத்துக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று(ஜூலை 24) பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல்பெற மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டத்தினர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.