பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது: அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று காலை அந்தந்த முகாம்களில் தொடங்கியது. இந்த பணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தமிழக மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் 10ம் வகுப்பு, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2023- 24ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வி வாரியம் செய்து வந்தது. விடைத்தாள்கள் அனைத்தும் மார்ச் 23ம் தேதி முதல் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த மையங்களில் இருந்து விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் தொடங்கினர். இந்த பணி வரும் 13ம்தேதி வரை நடைபெற உள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகளில் சுமார் 46 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகளை ஆசிரியர்கள் பின்பற்றி விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை செய்து வருகின்றனர். இந்த பணிகளை கண்காணிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்ததும், மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து திட்டமிட்டபடி மே 6ம் தேதி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!!

சிறுகதை-உறவு முத்திரை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!