ஸ்ரீபெரும்புதூர்: போந்தூர் பகுதியில் பதுங்கியிருந்து அரசியல் கட்சி பிரமுகரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ரவுடிகள் அடிக்கடி கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையிலான தனிப்படை போலீசார்,ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து குற்றச்செயலில் ஈடுபடுபவர்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு பதுங்கியிருந்த 5 பேரை கைது செய்து நடத்திய விசாரணையில், செங்காடு பகுதியை சேர்ந்த குகன் (27), ஸ்ரீபெரும்புதூர் விஆர்பி சத்திரம் பகுதியை சேர்ந்த யோகேஷ்வரன் (28), போந்தூர் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (30), உதயா (23), செல்வம் (33). ஆகிய 5 பேரும், அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி பதுங்கி இருப்பதாகவும், இவர்கள் 5 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.