கோவை: நடப்பாண்டில் பில்லூர் அணை 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை இடையில் தொய்வடைந்த நிலையில் தற்போது தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன்காரணமாக கேரள எல்லையோர தமிழ்நாட்டிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி, கேரள மலைப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பில்லூர் அணை நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வந்தது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியது. பில்லூர் அணை அதிகாலை 4 மணிக்கு முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகளின் வழியாக 8160 கன அடி நீர், மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி நீர் என மொத்தமாக 14,160 கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. பில்லூர் அணையிலிருந்து 18,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் பவானி ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது காலை 5 மணி நிலவரப்படி தண்ணீர் திறப்பு 18 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. பில்லூரிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.