ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 1997ம் ஆண்டின் அரசாணை 525ன்படி 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 250க்கு அதிமாகும்போது ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், பின்னர் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 300 மாணவர்கள் எண்ணிக்கைக்கும் கூடுதலாக ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், ஒரு பள்ளிக்கு 3 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மிகாமல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மேனிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை 400க்கும் அதிகமாகும் போது, அந்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்கு பதிலாக, ஒரு உடற்கல்வி இயக்குநர் பணியிடமாக தரம் உயர்த்திட அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் 250 மாணவர்களுக்கு 1 உடற்கல்வி ஆசிரியர் என்றுவைத்துவிட்டு, தற்போது அதிக அளவில் எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் மாணவர்கள் வழிதவறிப் ேபாகும் நிலையில், 700 பேருக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்று வைத்தால் மாணவர்களை எப்படி நெறிப்படுத்த முடியும். என்சிடிஇ-ன் விதிகளை பின்பற்றாமல் அரசாணை 150 மூலம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உபரிப் பணியிடமாக மாற்றி பணி நிரவல் செய்வது உடற்கல்வித்துறைக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே அரசாணை எண் 150 மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளை நடைமுறைப்படுத்தாமல் உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.