ஒரு போன் போட்டால் போதும்… பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய சேவை

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சாதாரண நாட்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்வர். தமிழக பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாநில பக்தர்களும் அதிகளவு வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களிடம் விரைவில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தருவதாகவும், சிறப்பு பூஜைகள் செய்து தருவதாகவும் கூறி பணத்தை சுருட்டுவதற்கு போலி வழிகாட்டிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றனர்.

இவர்களிடம் பணத்தை பறிகொடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் தற்போது கட்டணமில்லா தொலைபேசி சேவையை பழநி கோயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி ‘1800 425 9925’ என்ற எண்ணிற்கு போன் செய்தால்பூஜைகள் நடைபெறும் நேரம், தங்கும் அறைகள் பதிவு செய்வதற்கான வழிமுறைகள், வின்ச் மற்றும் ரோப்கார் இயக்க நேரங்கள், கட்டண விவரங்கள், பூஜைக்கு அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும். இது 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தலைமை அலுவலகத்தில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐபோன் தயாரிக்கும் ஆலை மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தகவல்

எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் மாநிலத்தை வளப்படுத்த வேண்டும்: புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை

உயரழுத்த மின் இணைப்பு கட்டணத்தை காசோலையில் பெறக்கூடாது: மின் வாரியம் உத்தரவு