ஆலந்தூர்: புழுதிவாக்கத்தில் ரூ.55 லட்சத்தில் அமைக்கப்பட்ட திரவ பெட்ரோலிய தகன எரிமேடை விரைவில் திறக்கப்பட உள்ளது. பெருங்குடி மண்டலம், 186வது வார்டுக்கு உட்பட்ட புழுதிவாக்கம் மயானபூமி உள்ள இடத்தில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ், ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் திரவ பெட்ரோலிய தகனமேடை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி தொடங்கியது. அன்றுமுதல் மயான பூமி மூடப்பட்டது. இந்த தகன எரி மேடைக்கான கட்டிடப் பணி முழுமூச்சுடன் நடைபெற்று வந்தது.
அவ்வப்போது இந்த பணிகளை அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, மண்டலக்குழு தலைவர் எஸ்வி ரவிச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில், இறுதி கட்டப் பணிகளை மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், வார்டு கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் குமரேசன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். நாளை மறுநாள் (4ம் தேதி) இந்த திரவ பெட்ரோலிய தகன எரிமேடை அமைச்சர்கள் முன்னிலையில் திறக்கப்படும், என கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன் தெரிவித்தார்.