சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் – 2016ன் கீழ் அமைக்கப்பட்ட மத்திய ஆலோசனை வாரியத்தின் 6வது குழுக்கூட்டம் டெல்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மைய வளாகத்தில் நேற்று ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை நிர்வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் சார்பாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முன்னோடி திட்டங்கள் குறித்து அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் உள்ளது போல், ஒன்றிய அரசும் மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப உதவி உபகரணங்கள் வழங்குவது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசுக்கு இக் கூட்டத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.