சென்னை: மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.1.75 கோடி மதிப்புடைய தங்க பசையை கடத்தி வந்ததை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர். மலேசியாவில் இருந்து சென்னை வரும் விமானத்தில் நேற்று முன்தினம், சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவர் தங்கம் கடத்தி வருவதாக, சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை, தனிப்படை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு விரைந்தனர்.
இந்நிலையில், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த தனியார் விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது சுற்றுலா பயணிகள் விசாவில், மலேசியா சென்று விட்டு வந்த சென்னையைச் சேர்ந்த 2 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். மேலும், தனி அறைக்கு அழைத்து சென்று அவர்களின் ஆடைகளுக்குள் சோதனை செய்தனர்.
அதில், 3 கிலோ தங்க பசைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.75 கோடியாகும். இதையடுத்து தங்கப் பசையை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் இருவரும் சர்வதேச கடத்தல் கும்பலில் கூலிக்கு பணியாற்றுபவர்கள் என் தெரிய வந்துள்ளது. இது குறித்து மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.