சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிற்சங்க உறுப்பினர்களான சக்திவேல், கனிவண்ணன், கிருஷ்ணவேணி, செந்தில்குமார் ஆகிய தொகுப்பூதிய பணியாளர்களை பெரியார் பல்கலைக்கழகம் கடந்தாண்டு ஜனவரி மாதம் நிரந்தர பணிநீக்கம் செய்தது. இதையடுத்து குற்றவியல் வழக்கு தொடர அனுமதி கோரி பெரியார் பல்கலைக்கழக தொழிற்சங்கத்தினர் சேலம் உதவி ஆணையரிடம் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து சட்ட விதிகளுக்கு புறம்பாக பணி நீக்கம் செய்த துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் பாலகுருநாதன் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு தொடர தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி ஆணை வெளியிட்டது. இதையடுத்து அரசு அனுமதி வழங்கிய ஆணையுடன் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.