தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஆலயத்தை வலம் வந்து கொடிப்பட்டதை சிவாச்சாரியார்கள் கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கு தீப தூப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உற்சவர் வள்ளி மணவாள பெருமாள் கோயிலை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் சிறப்பாக செய்திருந்தார். தொடர்ந்து ஆறுநாட்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. விழாவின் உச்சகட்டமாக வரும் 18ஆம் தேதி சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக முருகப்பெருமான் வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.