ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே அமணம்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்ட தீண்டாமை வேலியை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் ஊராட்சி அம்மணம்பாக்கம் பகுதியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 25 வருடத்திற்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் தனி நபர் ஒருவர் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாதபடி இரும்பு வேலி அமைத்துள்ளார். இதை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அந்த தீண்டாமை வேலியை அகற்றிட கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாலை தீடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருவள்ளூர் ஆர்டிஒ கற்பகம், தாசில்தார் வாசுதேவன் மற்றும் போலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரவு 9 மணியளவில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல தற்காலிகமாக ஒருபுறம் மட்டும் வேலியை அகற்றி வழி அமைத்தனர். போராட்டம் காரணமாக அமணம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.