பாம்பன் சுவாமிகள் கோயில், பெரியபாளையம் பவானியம்மன், ஆலங்குடி குருபகவான் உள்ளிட்ட 65 கோயில்களுக்கு குடமுழுக்கு கோலாகலம்!!

சென்னை: திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில், பெரியபாளையம் பவானியம்மன், ஆலங்குடி, குருபகவான் உள்ளிட்ட 65 கோயில்களுக்கு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பணிகள், குடமுழுக்கு, தேர் மற்றும் குளங்கள் புனரமைப்பு, கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகள் செம்மையாக நடந்து வருகின்றன.திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை 1,856 கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. 9,141 கோயில்களில் பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

குடமுழுக்கு நடந்து 66 ஆண்டுகளும், பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகளும் கடந்த நிலையில் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி,ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில், ரூ.170.11 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வரும் பெரியபாளையம் பவானியம்மன் கோயில், ரூ.1.52 கோடியில் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குரு ஸ்தலம்) கோயில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடந்த திருச்சி மாவட்டம், பூர்த்தி கோயில் திருமுக்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 65 கோயில்களுக்கு குடமுழுக்கு இன்று நடைபெற்றது.

குடமுழுக்கு நடைபெறும் கோயில்களில் சேத்துப்பட்டு கருகாத்தம்மன், சேலம் மாவட்டம், கிருஷ்ணாநகர், சீதாராமச்சந்திர மூர்த்தி கோயில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, நாட்டுச்சாலை, அமிர்தகடேஸ்வரர் கோயில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மொனசந்தை, கரியமாணிக்கப் பெருமாள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஞாயிறு, புஷ்பரதீஸ்வரர் கோயில்,கன்னியாகுமரி மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டிலுள்ள 7 கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், முத்துமாரியம்மன், ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம் சுந்தர விநாயகர் ஆகிய கோயில்களும் அடங்கும். குடமுழுக்கை முன்னிட்டு அதிகாலையிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் குவிந்தனர். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனித நீர் மந்திரங்கள் முழங்க கலசங்களில் ஊற்றப்பட்டன. கலசங்களில் ஊற்றப்பட்ட புனித நீர், பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர்.

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி