Sunday, June 30, 2024
Home » போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பெரியகோயில் பகுதியில் சாலை விரிவாக்கம்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பெரியகோயில் பகுதியில் சாலை விரிவாக்கம்

by Lakshmipathi

* இடத்தை பார்வையிட்டு கலெக்டர், மேயர், எம்பி ஆலோசனை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோயில் பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்வது குறித்து தஞ்சை எம்பி முரசொலி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உடன் ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டார்.தஞ்சாவூர் பெரிய கோயில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

உலக பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கொண்டே இருக்கும். மேலும் வாகன நிறுத்தம் பகுதியில் இருந்து சாலை கடந்து செல்ல வயதான பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே பெரிய கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தஞ்சாவூர் எம் பி எம்பி முரசொலி, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பெரிய கோயில் பார்க்கிங் பகுதியில் இருந்து சாலை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டனர்.

இதில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக பார்க்கின் உட்பட சாலை விரிவாக்கம் செய்வது குறித்து பல்வேறு யோசனைகள் ஆலோசிக்கப்பட்டது. மேலும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக முன்பு பயன்பாட்டில் இருந்த சாலையை மீண்டும் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மரங்கள் செடி கொடிகள் அகற்றும் பணியை எம் பி முரசொலி தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. பல்வேறு காரணங்களால் அந்த சாலை பயன்பாட்டில் இருந்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பாதையில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடமாக மாற்றி விட்டனர்.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரிக்கு வருவது என்றால் சுமார் நான்கு கிலோமீட்டர் சுற்றிக் கொண்டுவரும் அவலநிலை நீடித்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்த சாலையை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

அந்த சாலை முழுவதும் செடி கொடி மரங்கள் மண்டி மிகவும் மோசமான நிலையில் இருந்தது அதை எடுத்து மூன்று புல்டோசர்கள் வரவழைக்கப்பட்டு அவற்றை அகற்றும் பணி தொடங்கியது.இப்பணிகளை தஞ்சை எம்.பி. முரசொலி தொடக்கி வைத்து ஆய்வு செய்தார்.

அப்போது மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், பொறியாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சாலையில் உள்ள மரம் செடி கொடிகளை முழுமையாக அகற்றி சாலை விரிவாக்கம் செய்து உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளை எம்பி முரசொலி அறிவுறுத்தினார்.

இந்த சாலை அமைக்கப்பட்டால் ஏழை எளிய மக்கள் ஆட்டோவிற்கு அதிக அளவில் செலவு செய்யும் தொகை குறையும். மேலும் இந்த சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் சுற்றிக்கொண்டு வரும் நிலை மாறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

17 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi