Tuesday, July 9, 2024
Home » பெரம்பூரில் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தபோது பயங்கரம் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

பெரம்பூரில் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தபோது பயங்கரம் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

by Ranjith

* உணவு டெலிவரி ஊழியர்கள் போல பைக்கில் வந்த 4 பேர் வெறிச்செயல், உடனிருந்த 2 பேரும் படுகாயம்

சென்னை: பெரம்பூரில் வீட்டின் அருகிலேயே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவரி ஊழியர்கள் போல இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்தார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

இவர், நேற்று இரவு 7.15 மணியளவில் தனது வீட்டின் வெளியே அண்ணன் வீரமணி (65), பாலாஜி (53) ஆகியோருடன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனியார் உணவு டெலிவரி கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்கள் போல அதே சீருடையில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி வந்தது. வழக்கமாக உஷாராக இருக்கும் ஆம்ஸ்ட்ராங், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் என்று நினைத்து அசால்டாக நின்று பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் வந்த கும்பல் திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தடுக்க வந்த அவரது நண்பர்கள் 2 பேருக்கும் வெட்டு விழுந்தது. இதில், தலையில் பலத்த காயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அருள்தாஸ் என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், அவரது வீடு உள்ள பகுதி மற்றும் அப்போலோ மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவரது உடல் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அதேநேரத்தில் அவரது வீட்டு முன்பு நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் கொலை சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க், இணை கமிஷனர் அபிஷேக் தீக்சித், துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கொலையாளிகள் குறித்த அடையாளங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். கொலை சம்பவம் நடந்தவுடன் சென்னை நகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் அதற்குள் கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.

ஆம்ஸ்ட்ராங்க் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருந்தன. ரவுடிகள் பட்டியலில் அவரும் இருந்தார். பின்னர் அதில் இருந்து முற்றிலும் விலகி, பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். 2012ல் அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. மாயாவதிக்கு நெருக்கமானவராக இருந்து வந்தார். தமிழகத்தில் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலையில், டெய்லர் செந்தில், ஜான் கென்னடி, ஜெயசந்திரன், சைதை சந்துரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது பாம்சரவணன் என்ற ரவுடியும் சம்பவ இடத்துக்கு வந்தது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். பாம்சரவணனுடன், ஆம்ஸ்ட்ராங்கும், காரில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்ததாகவும், காரில் அவர் இருப்பதுபோல காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில், ஆம்ஸ்ட்ராங்க் கைது செய்யப்படவில்லை.

அவருக்கும் வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி அஞ்சலை மகன் பாலு, முருகேசேன் ஆகியோர் ஆம்ஸ்ட்ராங்க்கை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் 3 பேருமே தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இந்தக் கொலையை செய்திருக்கலாம்.

தற்போது சிறையில் உள்ள வடசென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி, இந்தக் கொலைக்கு உடந்தையாகவும், ஆதரவாகவும் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் 2 நாட்களுக்கு முன்னர் நெல்லையைச் சேர்ந்த சிலருக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ஒரு நிலம் தொடர்பாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்த மோதலில், அவர் கொலை செய்யப்பட்டரா என்ற சந்கேமும் எழுந்துள்ளது. ஆனால், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வடசென்னையில் அதுவும் பெரம்பூரில் கொலை செய்து விட்டு தப்பியிருக்க முடியாது.

உள்ளூரைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக வடசென்னையைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள்தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியபோது தடுத்த அவரது அண்ணன் வீரமணிக்கு தலை மற்றும் முகத்தில் 27 தையல்கள் போடப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவரான பாலாஜிக்கு காலில் தையல் போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* அரிவாள் பறிமுதல்
படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு வந்த போலீசார் அவரது மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 2 அடி நீளமுள்ள அரிவாளை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

* ஒரு மணி நேரம் சாலை மறியல்
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த செய்தி அறிந்து அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அவரது வீடு அருகில் உள்ள பேப்பர் மில்ஸ் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நீண்ட இழுபறிக்கு பிறகு கலைந்து போக செய்தார். இதனால் அப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.

 

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi