Saturday, September 7, 2024
Home » பெரம்பலூரில் டிராகன் பழம் சாகுபடி: எம்பிஏ பட்டதாரி அசத்தல்

பெரம்பலூரில் டிராகன் பழம் சாகுபடி: எம்பிஏ பட்டதாரி அசத்தல்

by Mahaprabhu

பெரம்பலூர்: டிராகன் பழம் தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, இஸ்ரேல் மற்றும் இலங்கையில் பிரபலமானது. தற்போது கர்நாடகா, நாகலாந்து, குஜராத் மாநிலம் என இந்தியாவில் இந்த பழம் பயிரிடுதல் அதிகரித்து வருகிறது. டிராகன் பழம் நோய் எதிர்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வெள்ளை ரத்த அணுக்களை பாதுகாக்க உதவுகிறது. இந்தப் பழங்கள் கால்சியம் சத்துக்கள் மிகுந்துக் காணப்படுவதாலும், குறிப்பாக கேன்சர் செல்களை அழிக்கும் சக்தி கொண்டது. இந்த பழத்தில் உள்ள் இனிப்பு சர்க்கரை நோயாளிகளை பாதிக்காது. இதனால் இந்தப் பழங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர். கிரிக்கெட் பந்துஅளவிற்கு, 400 கிராம் முதல் 600 கிராம் வரை எடை கொண்ட இந்தப் பழங்களுக்கு இப்போது ஏகப்பட்ட கிராக்கி உள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்தும், குஜராத் மாநிலத்திலிருந்தும் தமிழகத்திற்கு பெருமளவு இறக்குமதி செய்யப்படும் டிராகன் பழங்கள் தமிழ்நாட்டில் தர்மபுரி, விருதுநகரை அடுத்து பெரம்பலூரிலும் தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது.

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் பாலு(37). எம்பிஏ பட்டதாரியான இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் சின்ன வெங்காயம், நெல், கடலை, மக்காச்சோளம் சாகுபடி செய்து வந்தார். இந்நிலையில் கொரோனா காலத்தில் தோட்டக் கலைத்துறை மானிய உதவியுடன் 60 சென்டு நிலத்தில் தூண்கள் அமைத்து, பந்தல் முறையில் பீர்க்கங்காய், பாகற்காய், சுரைக்காய், புடலங்காய் சாகுபடியில் ஈடுபட்டார். பின்னர் அதே தூண்களை கொண்டு 2022ம் ஆண்டு ஜூன் மாதம் தாய்லாந்து நாட்டின் புகழ்பெற்ற டிராகன் பழம் சாகுபடி செய்து வருகிறார். விதைத்து 3ஆண்டுகளுக்குப் பிறகு முழு பலன்களை அளிக்கும் இந்த டிராகன் ஃபுரூட் பழச்செடிகள் தற்போது 2 ஆண்டுகளிலேயே காய்த்துப் பழுத்து விற்பனைக்கு வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விவசாயி பாலு கூறியதாவது: தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்திலும், விருதுநகர் மாவட்டம், விளாத்திகுளம் பகுதிகளிலும் டிராகன் ஃபுரூட் சாகுபடி தொழில் நுட்பத்தை கேட்டறிந்து 2022ல் தொடங்கினேன்.

தற்போது நாளொன்றுக்கு 4 கிலோ முதல் 5 கிலோ பழங்கள் கிடைக்கின்றன. இவற்றை கிலோ ரூ.200க்கு உழவர் சந்தையிலும், தினசரி காய்கறி மார்க்கெட்டிலும் விற்று விடுகிறேன். 1 தூணுக்கு 4 செடி உள்ளது. 1 ஆண்டுக்கு ஒரு தூண் கணக்கில் 200 கிலோ பழங்கள் கிடைக்கும். தொடர்ந்து தூண்கள் சரியாமல் செடிகளை கவாத்து செய்து பராமரித்து வந்தால் நீண்ட நாட்களுக்கு டிராகன் ஃபுரூட் செடிகள் பலன் கொடுக்கும். 3 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு பழங்கள் உற்பத்தி அதிகரிக்கும் போது திருச்சி, சேலம் மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்றார். வறண்ட பூமியான பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே திராட்சை, முட்டைக்கோஸ், காலிபிளவர், நூல்கோல், பேரிச்சம்பழம் போன்ற சாகுபடிகளில் சாதித்த விவசாயிகள் உள்ள நிலையில், தற்போது டிராகன் பழ சாகுபடியில் விவசாயி சாதித்து வருவது அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

You may also like

Leave a Comment

ten − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi