பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் நாட்டார்மங்கலத்தில் நாய்கள் விரட்டிய மான் கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பரிதாப பலியானது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் மலைப் பகுதியில் அதிகளவில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. கோடைகாலங்களில் வறட்சியால் தண்ணீர், இரை தேடி மான்கள் கிராமங்களுக்கு வருவது வழக்கம். அப்படி வரும்போது நாய்கள் கடித்து குதறி மான்கள் பலியாகி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் படையெடுத்து வருகிறன.
இன்று காலை தண்ணீர் தேடி மான் ஒன்று, நாட்டார்மங்கலம் வயல் பகுதிக்கு வந்தது. அப்போது அங்கிருந்த நாய்கள் மானை விரட்டி சென்றன. நாய்களுக்கு பயந்து தப்பி ஓடிய மான் அப்பகுதியில் உள்ள சுமார் 200 அடி ஆழம் கொண்ட குத்தகை உரிமம் முடிவு பெற்ற கல்குவாரி பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனக்காப்பாளர் மணிகண்டன் வந்து இறந்த மான் உடலை மீட்டு செட்டிகுளம் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர். அதில் இறந்தது 2 வயதுடைய பெண் மான் என்பதும், தெரியவந்தது. இதையடுத்து மானின் உடலை வனத்துறையினர் சிறுவாச்சூர் காப்பு காட்டில் கொண்டு சென்று புதைத்தனர்.