மக்கள் குறை தீர்க்கும் நாள்கூட்டத்தில் 331 கோரிக்கை மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள்குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுப்பிரச்னைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 331 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 76 மனுக்களும், சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 54 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 63 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 67 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 71 மனுக்களும் என மொத்தம் 331 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலகர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற, பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் விபத்து மரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பயனாளி இறந்தவரின் நியமனதாரர் (மனைவி) ஆ.வசந்தி மற்றும் வாரிசுதாரர்களான ஆ.தனஞ்செழியன், ஆ.பிரபஞ்செழியன் ஆகியோருக்கு அதற்கான ஆணையை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

மேலும் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் பட்டாபிராம் பகுதியில் வசித்து வரும் ஆரோக்கிய மைக்கல்ராஜ் என்பவர் மத்திய பிரேதசம் மாநிலத்தில் நடைபெறும் தேசிய தர பாரா மேசை பந்து சாம்பியன் போட்டியில் பங்கேற்க மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.அதேபோல் திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி வட்டம் சிவாடா கிராமத்தில் வசித்து வரும் முனிகிருஷ்ணன் மனைவி சுனிதா என்பவர் மிக்ஜாம் புயலால் தனது வீடும், தொழிலும் பாதிக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் தொழில் செய்ய மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார்தனி, துணை ஆட்சியர் சமுக பாதுகாப்பு திட்டம் வி.கணேசன், தொழிவாளர் உதவி ஆணையர் (பொன்னேரி) மு.வரதராஜன், மாற்றுத் திறானாளி நல அலுவலர் சீனிவாசன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!

மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!!

ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது: கவிஞர் வைரமுத்து பதிவு