டெல்லி: வயநாடு மக்கள் என் இதயத்தில் தனித்துவமான இடத்தை பிடித்து விட்டனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். தொடர்ந்து அவர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். நாளை நண்பகல் 12 மணியளவில் கல்பெட்டாவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக இன்று மாலை பிரியங்கா காந்தி வயநாடு வருகிறார். அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வருகிறார்.
முதன் முதலாக தேர்தலில் போட்டியிட உள்ள பிரியங்கா காந்திக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நாளை வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி; வயநாடு மக்கள் என் இதயத்தில் தனித்துவமான இடத்தை பிடித்து விட்டனர். வயநாடு தொகுதிக்கு பிரியங்கா காந்தியை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்யக்கூட முடியாது. வயநாடு மக்கள் தேவைக்காக நாடாளுமன்றத்தில் அவர்களது குரலாக பிரியங்கா ஒலிப்பார். நாளை பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யும்போது எங்களுடன் வாருங்கள் என்று மக்களுக்கு ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.