பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, மாஜி அமைச்சர் சிடி ரவி உள்பட 17 பேர் நேற்று எம்எல்சியாக பதவி ஏற்றுக்கொண்டனர். பெங்களூரு விதான சவுதா வரவேற்பு அரங்கில் நடந்த விழாவில் மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி புதிய எம்எல்சிக்களுக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து முதல்வர் சித்தராமையா, சட்டத்துறை அமைச்சர் எச்கே பாட்டீல், மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆகியோருடன் புதிய எம்எல்சிக்கள் 17 பேரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பதவி ஏற்பு விழாவில் மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி பேசுகையில், புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கிறேன். நமது மேலவை தனி சிறப்பு மிக்கது. மேலவை விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் விதிகளை மதிக்க வேண்டும். அவை மரபுகளை கடைபிடிக்கவேண்டும். மக்கள் வரிப்பணத்தில் அவை செயல்படுகிறது. எனவே, இயங்கும் ஒவ்வொரு மணி நேரமும் பயனுள்ளதாக இருக்கவேண்டும். மேலவை உறுப்பினர்கள், இதை உணர்ந்து செயல்படவேண்டும்.
அது மட்டும் இன்றி மேலவை உறுப்பினர்கள் ஏற்கனவே நடந்த விவாதம் அதன் மீதான தீர்ப்புகள் உள்ளிட்டவை நூலகத்தில் உள்ளன. புதிய உறுப்பினர்கள் மட்டும் இன்றி அனைவரும் அதை தெரிந்து கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு பசவராஜ் ஹொரட்டி கூறினார். பாஜ கட்சியின் மாஜி தேசிய பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சிடி ரவி கடந்த சட்ட சபை தேர்தலில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் பாஜவின் சார்பில் எம்எல்சி பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. எம்எல்சியாக பதவி ஏற்ற சி.டி.ரவி, மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, முதல்வர் சித்தராமையா ஆகியோருக்கு மலர் கொத்து வழங்கினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வர் சித்தராமையாவை காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
* நமது மேலவை தனி சிறப்பு மிக்கது. மேலவை விவாதத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் விதிகளை மதிக்க வேண்டும். அவை மரபுகளை கடைபிடிக்கவேண்டும். மக்கள் வரிப்பணத்தில் அவை செயல்படுகிறது.