இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், சாலை அமைக்க வேண்டும் என்று கோரி வந்தனர். ஆனால், ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம், சமரசம் பேசி அப்புறப்படுத்தினர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த செரப்பணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலையை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் இந்த குடியிருப்பு வாசிகள் ரூ.35 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளனர். அதை கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு சாலை, அடிப்படை வசதி செய்து தர முடியும் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அடிப்படை வசதி செய்து கொடுக்க முடியாத உங்களுக்கு நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும். நீங்கள் அடிப்படை வசதியை முழுமையாக செய்து கொடுத்துவிட்டு பிறகு வரி வசூலிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை கண்ட போலீசார் பொதுமக்களை சமாதானம் பேசி ஊராட்சி மன்ற தலைவரை அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.