பாராமதி தொகுதியில் உங்கள் பிரச்னைகளை பற்றி பேசும் நபர் வேண்டுமா அல்லது அமைதியானவர் வேண்டுமா என்று சுப்ரியாசுலே எழுப்பிய கேள்வியால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிரிந்து விட்டது. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தற்போது பா.ஜ கூட்டணியில் உள்ளது. சரத்பவார் தலைமையிலான கட்சி காங்கிரஸ் அணியில் உள்ளது. சரத்பவாரின் பாரம்பரிய தொகுதியான பாராமதியில் தற்போது அவரது மகள் சுப்ரியா சுலே எம்பியா உள்ளார். அந்த தொகுதியில் அஜித்பவார் தரப்பு சார்பில் அவரது மனைவி சுனேத்ரா பவார் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் பாராமதி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சுப்ரியா சுலே கலந்து கொண்டு பேசியதாவது: உங்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப உங்கள் வாக்குகளைக் கோருகிறேன். கணவர் நாடாளுமன்றத்திற்குச் சென்று பேசும் போது அமைதியாக அமர்ந்திருக்கும் ஒருவரை உங்களால் தேர்ந்தெடுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவரை வேட்பாளராக்க நீங்கள் விரும்புகிறீர்களா?. எனது கணவர் நாடாளுமன்றத்துக்குச் சென்றால், அவர் மக்களவைக்குள் கூட நுழைய முடியாது. அவர் அங்குள்ள கேன்டீனில் எனக்காகக் காத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அஜித்பவார் மனைவியை குறிவைத்து அவர் இவ்வாறு பேசியதாக கூறப்படுவதால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.