திருமலை: ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாண் நேற்று பொறுப்பேற்று கொண்டு, முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆந்திர மாநில துணை முதல்வராக நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் விஜயவாடா சூர்யாரூபேட்டாவில் உள்ள நீர்ப்பாசனத் துறை விருந்தினர் மாளிகையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் வேத பண்டிதர்கள் ஆசியுடன் நேற்று பதவி ஏற்றார். மாநில துணை முதல்வராக பவன் கல்யாண் 2 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தோட்டக்கலை தொடர்பான பணிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நிதிகளுடன் இணைத்து முதல் கோப்பிலும், இரண்டாவது பழங்குடியின கிராமங்களில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார். முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக நீர் விநியோகத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, அறிவியல் தொழில்நுட்ப துறை பவன் கல்யாணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.