இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதிமுக பகுதி செயலாளர் மூர்த்தி, அவரது மனைவி சுதா ஆகியோர் அரசு இடத்தை அபகரித்திருப்பதும், அதற்கு அரசு அதிகாரிகளே துணை போய் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இந்த இடத்தின் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளை 3 மணி நேரத்தில் செய்து, அதிகாரிகள் லஞ்சம் பெற்றிருப்பதும் உறுதியானது. இதையடுத்து, வேளச்சேரி தாசில்தாராக பணியாற்றிய மணிசேகர் (43) தற்போது அம்பத்தூர் சிறப்பு தாசில்தார்-2 ஆக உள்ளார். மேலும் சர்வே துணை ஆய்வாளராக பணியாற்றிய லோகநாதன் (37). இவர் தற்போது கோவை மாவட்டம் சூலூரில் பணியாற்றுகிறார், கள சர்வேயராக பணியாற்றிய சந்தோஷ்குமார் (37) இவர் தற்போது மாம்பலம் சர்வே உதவி ஆய்வாளராக உள்ளார்.
மூத்த வரைபடவாளராக பணியாற்றிய தேவி (46), வேளச்சேரி ஆண்டாள் நகர் விரிவாக்கம் 3-வது தெருவை சேர்ந்த அதிமுக பகுதி செயலாளர் எம்.ஏ. மூர்த்தி (46), அவரது மனைவி சுதா ஆகிய 6 பேர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், சென்னை வேளச்சேரி பரணி தெருவில் உள்ள சிறப்பு தாசில்தார் மணிசேகரின் வீடு, மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்தோஷ் குமாரின் வீடு, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தேவி, அதிமுக பகுதி செயலாளர் எம்.ஏ. மூர்த்தியின் வேளச்சேரி இல்லம் மற்றும் கோவை மாவட்டம் வடகுபாளையத்தில் உள்ள லோகநாதன் வீடு என ஆகிய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.