சென்னை: கட்சிப் பணிகள் குறித்து மண்டலம் வாரியாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இளைஞரணி அமைப்பாளர்களுடன் அமைச்சர் உதயநிதி கோவையில் நாளை ஆய்வு கூட்டம் நடத்துகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 40க்கு 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. திமுக வேட்பாளர்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினர்.
அடுத்த கட்டமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல், அதை தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியின் மாவட்ட மாநகர, மாநில அமைப்பாளர். துணை அமைப்பாளர்கள் செய்து வரும் கட்சிப்பணிகள் குறித்து மண்டலம் வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார்.
தற்போது 5-வது மண்டலத்தில் உள்ள நிர்வாகிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தை கோவையில் வரும் 14ம்தேதி நடத்த உள்ளார்.
கோவையில் உள்ள லீ-மெரிடியன் என்ற தனியார் ஓட்டலில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியில் இருந்து இரவு வரை இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.முதலில் நீலகிரி மாவட்டம், அதன் பிறகு திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்கும் மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் பராமரித்து வரும் மினிட் புத்தகம், கட்சி பணிகள் குறித்து வெளியான புகைப்பட கோப்புகளையும் உடன் கொண்டு வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.