அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரை தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவு தெரிவித்து, மதுரை மாட்டுத்தாவணியில் காய்கறி, பழ சந்தைகளில் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்து நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திராவிட கட்சிகளால் எந்த பயனும் இல்லையென்றால் அன்புமணி ஏன் எங்களுடன் மாறி, மாறி கூட்டணி வைத்துக் கொண்டிருந்தார்? ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களுக்கு ஒவ்வொரு நிலைப்பாடு. நிலையான கொள்கை இல்லாத கட்சி பாமக. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெயலலிதா மீது எப்போதும் மரியாதை உண்டு என்று கூறியுள்ளார். பரவாயில்லை. எங்கள் தலைவரின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார். எதிர் அணியில் இருப்பவர்கள் கூட எங்கள் தலைவர்களை புகழ்ந்து பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மறைந்த தலைவர்களை பாராட்டுவது தான் மரபு. இன்றைக்கு நாங்கள் அவர்களை எதிர்க்கிறோம். அவர்கள் எங்களை எதிர்க்கிறார்கள். எப்படி என்னை பாராட்டுவார்கள். அதிமுகவில் நான் ஒரு தொண்டன். தலைவன் அல்ல. அதிமுகவில் 100 சதவீதம் வாரிசு அரசியல் இல்லை ’’ என்றார்.