Tuesday, July 9, 2024
Home » கட்சி வளர்ந்திருப்பதாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார் பொய்யையே பேசி வாயால் வடை சுடுகிறார் அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

கட்சி வளர்ந்திருப்பதாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார் பொய்யையே பேசி வாயால் வடை சுடுகிறார் அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

by Ranjith

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்காக நேற்று காலை கோவை பீளமேடு விமான நிலையம் வந்தார். அங்கு அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு ஏற்கனவே காரணத்தை தெரிவித்துவிட்டோம்.

அப்படி இருந்தும் அண்ணாமலை, அதிமுகவை திட்டமிட்டு குறை சொல்லி வருகிறார். இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்டால், 3 அல்லது 4ம் இடம்தான் வரும் எனவும் அவர் கூறியுள்ளார். அவர், மெத்த படித்தவர், மிகப்பெரிய அரசியல் ஞானி. அதனால்தான் அவரது கணிப்பு அப்படி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் சுமார் 6,800 வாக்கு மட்டுமே குறைவாக பெற்றுள்ளார்.

அங்கு, அதிமுக 2ம் இடத்தில் உள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்புக்கு பல்வேறு காரணங்களை நாங்கள் கூறியிருக்கிறோம். அதிமுகவின் நிலைபாடு குறித்து அவர் விமர்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது போல் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அது உண்மை அல்ல. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ., பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. அப்போது கோவை நாடாளுமன்ற தொகுதியில் அப்போதைய வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளரைவிட 42 ஆயிரம் வாக்கு குறைவாக பெற்றார்.

தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிட்டார். ஆனால், திமுக வேட்பாளரைவிட ஒரு லட்சத்து 18 ஆயிரம் ஓட்டு குறைவாக பெற்றுள்ளார். அப்படி பார்க்கும்போது பாஜ எங்கே வளர்ந்திருக்கிறது? 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி 18.80 சதவீதம் வாக்கு பெற்றது. ஆனால், தற்போது நடந்த தேர்தலில் பாஜ கூட்டணி 18.28 சதவீதம் வாக்குதான் பெற்றுள்ளது. அதாவது, 0.52 சதவீதம் குறைவாகத்தான் வாக்கு பெற்றுள்ளது.

ஆனால், அவர் தினந்தோறும் பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கிறார். பேட்டியிலேயே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு இருக்கிறார். இவர், பாஜ மாநில தலைவராக வந்த பிறகு, ஒன்றிய அரசின் புதிய திட்டங்கள் எதையெல்லாம் தமிழகத்துக்கு பெற்று தந்தார்? எதுவுமே கிடையாது. வாயிலேயே வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார். எப்போது பார்த்தாலும் பொய் செய்திகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்.

மற்ற கட்சிகள் பற்றி அவதூறாக பேசுவதைத்தான் அவர் தொடர்ந்து வழக்கமாக கொண்டுள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்டபோது, 100 நாளில் 500 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி கொடுத்தார். எந்த கட்சி தலைவரும் இப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது இல்லை. இப்படி பொய்யான செய்தியை சொல்லி, வாக்கு பெற்றுள்ளார். இப்போது மத்தியில் பாஜ ஆட்சிதான் உள்ளது. 100 நாளில் 500 வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுபோன்ற தலைவர்கள் இருப்பதால்தான், 300க்கும் மேற்பட்ட இடங்களை வென்று ஆட்சி அமைத்த பாரதிய ஜனதா கட்சி, இப்போது சறுக்கி, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. இதை, முதலில் அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும். அவர், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள அதிமுக பற்றி விமர்சித்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* அதிமுகவில் ஓபிஎஸ்சை மீண்டும் சேர்க்கும் எண்ணமில்லை
எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், ‘ஓ.பி.எஸ்., அதிமுகவுக்கு வர்றது, போறது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இது கடையில் விற்கும் பொருள் அல்ல. இது, கட்சி. அதிமுகவுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகள்படிதான் கட்சியை நடத்துவோம். அவர், இந்த கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்தினால்தான், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இது, நான் அல்லது வேலுமணி எடுத்த முடிவு அல்ல. அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவு. அதிமுக தொண்டர்களின் மனநிலை இது. அவர் மட்டும் அல்ல. அவரோடு சேர்ந்து 3 பேர் நீக்கப்படுகிறார்கள். இது, முழுக்க முழுக்க பொதுக்குழு எடுத்த முடிவு. ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் குரல், பொதுக்குழு தீர்மானமாக வெளிவந்துள்ளது. அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கிற எண்ணம் ஒருபோதும் இல்லை’ என்றார்.

* அன்று ஜானகி… இன்று சசிகலா… பதவிக்கு எடப்பாடி சொன்ன கதை
‘அதிமுகவை ஒருங்கிணைப்போம் என சசிகலாவால் எப்படி சொல்ல முடியும்? அவர் அதிமுக என்கிற கட்சியிலேயே இல்லை. கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது சசிகலா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அரசியலில் இருந்து நான் விலகுவதாக கூறியிருந்தார். தற்போது 3 ஆண்டு காலம் கழித்து ரீ-எண்ட்ரி என்கிறார். வெளியே போய்விட்டு, மீண்டும் வந்து இணைவதற்கு இது என்ன கார்ப்பரேட் கம்பெனியா? இது கட்சி.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது, ஜானகி அம்மாள் அழகாக அறிக்கை வெளியிட்டார். அம்மாதான் இந்த கட்சியை ஏற்று நடத்துவார்கள், அவருக்கு நான் உறுதுணையாக இருப்பேன் என கூறியிருந்தார். அந்த நற்பண்பு சசிகலாவிடமும் இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்படிப்பட்ட எண்ணத்தில் அவர் செயல்பட்டால் நன்றாக இருக்கும் என தொண்டர்கள் அனைவரும் நினைக்கிறார்கள்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

thirteen − 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi