ராஞ்சி: ஜார்க்கண்டில் பாஜ,ஜேஎம்எம் கட்சியின் 2 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரவீந்திரநாத் மகாட்டோ உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளும் ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ லோபின் ஹேம்ப்ராம் மற்றும் பாஜவை சேர்ந்த எம்எல்ஏ ஜெய்பிரகாஷ் படேல். அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் ராஜ்மகால் தொகுதியில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் விஜய் ஹன்ஸ்டாவை எதிர்த்து ஹேம்ப்ராம் சுயேச்சையாக போட்டியிட்டார்.
மக்களவை தேர்தலுக்கு முன்னர் பாஜவில் இருந்த ஜெய்பிரகாஷ் படேல் திடீரென காங்கிரசில் சேர்ந்தார். இவர் ஹசாரிபாக் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தலில் இருவரும் தோல்வியடைந்தனர்.ஹேம்ப்ராம், ஜெய் பிரகாஷ் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்டமன்ற சபாநாயகர் ரவீந்திரநாத் மகாட்டோவிடம் ஜேஎம்எம், பாஜ ஆகிய கட்சிகள் புகார் அளித்தன. இது பற்றி விசாரணை நடத்திய சபாநாயகர் ரவீந்திரநாத் மகாட்டோ இரண்டு எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.