சிவகங்கை: சிவகங்கை அரண்மனைவாசலில் நேற்று மாலை நடந்த பாஜ 9ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ‘‘ 2024ல் 400 எம்பிக்களை பெற்று மோடி மறுபடியும் ஆட்சிக்கு வருவார். சிவகங்கை தொகுதியில் இந்த முறை பாஜ வெற்றியை தவற விடப்போவது கிடையாது. அது நடக்கப்போகிறது. அப்படி நடக்கவில்லையெனில் அது சரித்திர பிழையாகும்’’ என்று பேசினார். அதிமுக கூட்டணியில் முட்டல் மோதல் இருந்து வரும் நிலையில், சிவகங்கையில் பாஜபோட்டியிடும். வெற்றி பெறும் என தொகுதியை முடிவு செய்து அண்ணாமலை பேசியதால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ சார்பில் எச்.ராஜா போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். எனவே, இம்முறை அதிமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சியினர் தலைமையிடம் தொடர்ந்து கூறி வந்தனர். இந்த சூழலில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்த முறையான அறிவிப்பில்லாமல், அண்ணாமலை பேசியது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.