Tuesday, September 17, 2024
Home » நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-காங்கிரஸ் இடையே வரும் 28ம்தேதி பேச்சுவார்த்தை: அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-காங்கிரஸ் இடையே வரும் 28ம்தேதி பேச்சுவார்த்தை: அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது

by Karthik Yash

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-காங்கிரஸ் இடையே வரும் 28ம்தேதி அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாஜ அரசை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியில் 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆளும் திமுக தலைமை வகிக்கிறது.

திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, கொமதேக, முஸ்லிம் லீக், தவாக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டிருந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான இந்த குழுவில் 35 பேர் உள்ளனர். திமுகவும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க 3 குழுக்களை சமீபத்தில் அமைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்ந சூழ்நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த இந்தியா கூட்டணி சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை வரும் 28ம் தேதி மாலை 3 மணி அளவில் சென்னை அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் முகுல்வாஸ்னிக் மற்றும் அசோக் கெலாட் ஆகியோர் சென்னை வருகின்றனர். இவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகிய 4 பேர் மட்டுமே அண்ணா அறிவாலயம் செல்கின்றனர். இவர்கள் திமுகவில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பாக விவாதிக்கின்றனர். ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக கூட்டணி தொடங்கியிருப்பதன் மூலம் தேர்தல் பணிகள் சூடுபிடித்து வருகிறது.

You may also like

Leave a Comment

four × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi