சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என பல முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது. அதிமுக பிரிந்த நிலையில் தனி அணி அமைக்க முயற்சி செய்து வரும் பாஜ, தேமுதிக, அமமுக, ஓபிஎஸ் அணி, பாமக ஆகிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக டிடிவி.தினகரன், ஓபிஎஸ் உடன் பாஜ பேசி வருவதாக தெரிகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, அரக்கோணம், ஆரணி, திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட 22 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை பாஜ தேசிய தலைமைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுகவின் சின்னமான குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.