கோவை: கோவை விமான நிலையத்திற்கு நேற்று வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், ‘நூலகம் திறப்பது நல்ல விஷயம், அது ஒரு அறிவு சார்ந்த விஷயம் என்பதால் வரவேற்கத்தக்கது. அனைத்து ஊர்களில் திறந்தாலும் நல்லது தான். கேப்டன் விஜயகாந்த் நன்றாகவும், சிறப்பாகவும் இருக்கிறார். முக்கியமான நேரங்களில் தொண்டர்களை கட்டாயம் அவர் சந்திப்பார். அனைத்து மாவட்டங்களிலும் எங்களுடைய உட்கட்சி தேர்தல் முடிந்து விட்டது. செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்டவற்றை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும்.
அதனை அடுத்து தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். அதற்குப் பிறகு தேர்தலுக்கு முன்பு கூட்டணியா? இல்லையா? என்பதை தலைவர் அறிவிப்பார். மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியா முழுவதும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எண்ணினாலும் அந்த கட்சிகளுக்குள்ளேயே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. எனவே, இறுதியில் மக்கள் எந்த கூட்டணியை ஏற்றுக் கொள்கிறார்கள் யார்? ஜெயிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.