அத்துடன் பிரிவினைவாதம், வெறுப்பு அரசியல் போன்றவற்றை இந்திய மக்கள் முற்றாக நிராகரித்துவிட்டனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக சோனியா காந்தி கூறியுள்ளார். இருப்பினும் எதுவுமே மாறாதது போல், பிரதமர் மோடி செயல்படுவதாக சாடி உள்ள சோனியா, கருத்து ஒற்றுமையின் மதிப்பை போதித்து, மோதலை ஊக்குவிக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார். 18வது மக்களவையின் முதல் சில நாட்களிலேயே பிரதமர் மோடியின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் என்ற நம்பிக்கை பொய்த்து போய்விட்டதாக சோனியா கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை ஏன் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய சோனியா காந்தி, நெருக்கடிநிலை விவகாரத்தை தோண்டியெடுத்து பிரதமர் மோடியும் சபாநாயகருக்கு விமர்சித்ததை கண்டித்துள்ளார். நெருக்கடி நிலைக்கு பின்னர் 3 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தேர்தல் வெற்றி பெற்றதை சுட்டிக் காட்டிய சோனியா, இது போன்ற ஒரு வெற்றியை பிரதமர் மோடி பெற்று இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் மோசடி குறித்து தற்போது பிரதமர் மோடி மவுனம் சாதித்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் யுஜிசி மற்றும் என்சிஇஆர்டி அமைப்புகளை சிதைத்துவிட்டதாக சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். 400 தொகுதிகளில் வெற்றி என்ற மோடியின் விருப்பத்தை மக்கள் நிராகரித்தபோது, அம்மக்களின் முடிவுக்கு பிறகாவது பிரதமர் மோடி சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பி உள்ள சோனியா, நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளில் ஆரம்பமே சரியில்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.