Sunday, October 6, 2024
Home » நாடாளுமன்றத்திற்கு செல்லலாம்னு மனக்கோட்டை கட்டிய தேசியக்கட்சி எம்எல்ஏ திடீர் அப்செட்டான கதையை சொல்கிறார்: wiki யானந்தா

நாடாளுமன்றத்திற்கு செல்லலாம்னு மனக்கோட்டை கட்டிய தேசியக்கட்சி எம்எல்ஏ திடீர் அப்செட்டான கதையை சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘கதர் கட்சி நடத்தும் மாவட்ட மாநாடு துண்டு நோட்டீஸ் பெயர்கள் பிரச்னை பூதாகாரமாக வெடிச்சிருக்காமே’’ என கேட்டார் பீட்டர் மாமா.எம்பி தேர்தல் நெருங்குவதால கதர் கட்சியில் மாவட்டம் வாரியாக பூத், வார்டு கமிட்டி மாநாடுகள் நடத்திட்டு வர்றாங்க.. வரும் 17ம் தேதி கடைகோடி மாவட்ட மாநாடு நடத்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கு.. இதற்காக துண்டு நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு இருக்காம். அதிலிருந்து இப்ப கட்சிக்குள்ள சலசலப்பு தொடங்கி இருக்காம்.. துண்டு நோட்டீசில் எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட தலைவர்கள் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாம்..

இதனால மற்ற கட்சிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட மாவட்ட, மாநில, அகில இந்திய பொறுப்புகளில் உள்ளவர்களின் பெயர்களை நோட்டீசில் போடாதது ஏன் என கேள்விமேல கேள்வி எழுப்ப தொடங்கிட்டாங்களாம். ராஜஸ்தானில் இப்படிதான் பிரச்னை தொடங்கியது, அங்கு ஆட்சியை இழந்துள்ளோம் என்றும் அவர்கள் உதாரணம் வேறு காட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்களாம்.. இதனால வரவிருக்கும் கூட்டத்தில் இதுவும் ஒரு பிரச்னையாக எதிரொலிக்கும்னு கதர் கட்சியினரே குமுறுகிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அல்வா நகர தொகுதியில போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு செல்லலாம்னு தேசிய கட்சி எம்எல்ஏ மனக்கோட்டை கட்டியிருந்தாராமே’’ எனக் கேட்டபடி வந்தார் பீட்டர்மாமா. ‘‘இலைக்கட்சி கூட்டணி தயவுடன் எம்எல்ஏ ஆனது போல் நாடாளுமன்றத்திற்கும் சென்று விடலாம் என மனக்கோட்டை கட்டியிருந்தார் அல்வா தொகுதியின் எம்எல்ஏ. இலைக்கட்சியில் விஐபியாக வலம் வந்த அவர், தேசிய கட்சியில அதிகபட்சம் எம்எல்ஏ பதவியைத்தான் பிடிக்க முடிந்தது. மத்தியில நம்ம ஆட்சி இருந்தும் தனக்கு விஐபி அந்தஸ்து கிடைக்கவில்லையே என்பது அவருக்கு நெடுநாள் ஏக்கமும்கூட… அதனால, இந்த முறை எப்படியாவது அல்வா தொகுதியை பெற்று தேசிய அரசியலுக்கு சென்று விடலாம்னு எண்ணியிருந்தாராம் அந்த எம்எல்ஏ.

அதற்குள் இலைக்கட்சி கூட்டணி டமால் ஆகிவிட சிறிது காலம் அமைதியாக இருந்தார். ஆனா, அல்வா தொகுதியின் பொறுப்பாளர்கள் கூட்டத்தை போட்டு அமர்க்களப்படுத்திய சமத்துவ கட்சியின் நடிகர், தேசிய கட்சியை வாயாரப் புகழ்ந்து தள்ளிட்டார். ஒரு தொகுதி என்பதை வெளிப்படுத்திய அவர் நாடாளுமன்ற தேர்தலில் ஒண்ணே ஒண்ணு தான் கேட்பேன் என்றுகூறி தனது கட்சித் தொண்டர்களையும் ரொம்பவே உற்சாகப்படுத்தினார். அல்வா தொகுதியை மையப்படுத்தி தான் சமத்துவ கட்சியின் நடிகர் அப்படி பேசினார் என்பதால், தேசிய கட்சியின் அல்வா நகர எம்எல்ஏ கூடுதல் அப்செட் ஆயிட்டார். எப்படியாவது இலைக்கட்சி கூட்டணிக்கு வந்து சேர்ந்தாலும், தற்போது சமத்துவ கட்சியின் நடிகர், தொகுதிக்கு புதிய பிளான் போட்டுள்ளாரேன்னு தனது ஆதரவாளர்களிடம் சொல்லி ஆதங்கப்படுகிறாராம்..

இதனால்தான் கடந்த பிரஸ் மீட்டில் பேசிய அல்வா நகர எம்எல்ஏ தேசிய கட்சி யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக்கூறி ரூட்டை மாத்தினாராம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘எதிரும் புதிருமா இருந்த மாஜி மந்திரிங்க கைகோர்த்த உற்சாகம் போஸ்டரால விரிசலாகி இலைக்கட்சி தொண்டர்களை புலம்ப வச்சிருக்காமே. அதுபற்றி சொல்லுங்க’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு மாவட்ட இலைக்கட்சி உளறல் மாஜி மந்திரியும், அதே மாவட்டத்தை சேர்ந்த மாஜி ஷாக் மந்திரியும் எதிரும் புதிருமாக இருந்தாங்க… அதிருப்தி காரணமா, இருவருக்கும் சேலத்துக்காரர் உரிய மதிப்பு அளிப்பதில்லையாம்.. இதனால பகைமை மறந்து இருவரும் கட்சி விழாக்கள், குடும்ப விழாக்களில் கரம் கோர்க்க தொடங்கினாங்க..

‘ஆஹா… பிரிஞ்சு கிடந்த 2 பேரும் ஒண்ணு கூடிட்டாங்கய்யா… ஒண்ணு கூடிட்டாங்கய்யா…’ என இருதரப்பு ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் திளைச்சாங்க.. ஆனா இது கொஞ்ச காலம் கூட நீடிக்கல… கடந்த 11ம் தேதி மாஜி ஷாக் மந்திரியின் பிறந்த நாளை, அவரது ஆதரவாளர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினார்களாம்.. மெகா போஸ்டர்கள், பேனர்கள், நலத்திட்ட உதவிகள், கோயில்களில் சிறப்பு வழிபாடுன்னு நிகழ்ச்சிகள் களைகட்டியிருக்கு.. போஸ்டர்களில் மாஜி மந்திரியோடு, அவரது மகன் படமும் இருந்துச்சாம்.. தனது, மாவட்ட எல்லை பகுதியில் மட்டுமல்லாது, உளறல் மாஜி மந்திரியின் ஏரியாக்களிலும் திரும்பும் திசையெங்கும் பேனர்கள், போஸ்டர்களாக காட்சி அளித்ததாம்..

இதனால உளறல் மாஜியும், அவரோட ஆதரவாளர்களும் ரொம்பவே டென்ஷன் ஆயிட்டாங்களாம்.. ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் மகனை இலைக்கட்சியில களமிறக்கவே, இந்த பிறந்தநாள் சுவரொட்டிகள், பேனர்களை தங்கள் பகுதியில் வேண்டுமென்றே ஒட்டி பிரசாரம் செய்துட்டு வர்றாங்க… அடுத்து, நம்ம தலைவர் பிறந்த நாளுக்கு அவரது பையன் படத்தை போட்டு போஸ்டர் ஒட்டுவோம் என உளறல் மாஜியின் ஆதரவாளர்கள் பேசி வருகின்றனராம்… ‘யார் கண்ணுபட்டுச்சோ… சேர்ந்த வேகத்திலேயே விரிசலாகி போயிருச்சே…’ன்னு இலைக்கட்சியினர் புலம்பத் தொடங்கியிருக்கிறாங்களாம்’’ என முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

eighteen − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi