Thursday, June 27, 2024
Home » நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளி : இதுவரை 15 எம்.பி.க்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளி : இதுவரை 15 எம்.பி.க்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

by Porselvi

புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் அத்துமீறி இளைஞர்கள் 2 பேர் நுழைந்து முழக்க மிட்டனர். மேலும், வண்ண குண்டுகளையும் வீசினர். இதேபோல் நாடாளுமன்றத்தின் வெளிப்பகுதியில் பெண் உள்பட 2 பேரும் கோஷமிட்டனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் கூடியது. அப்போது பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து மக்களவை பிற்பகல் 2 மணி வரைஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மக்களவை 2 மணிக்கு பிறகு மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் ஜோதிமணி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன், ஹிபி இடன் ஆகியோர் மக்களவையில் இருந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார். இதே போல் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், அவையின் மைய பகுதிக்கு வந்து தொடர்ந்து முழக்கமிட்டார். அவரை நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலும் இருந்து சஸ்பெண்ட் செய்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார். இதனிடையே மக்களவையில் மேலும் 9 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்..எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது.

இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

▪️ கனிமொழி
▪️ ஜோதிமணி
▪️ சு.வெங்கடேசன்
▪️ மாணிக்கம் தாகூர்
▪️ சுப்பராயன்
▪️ பி.ஆர்.நடராஜன்
▪️ எஸ்.ஆர்.பார்த்திபன்
▪️ பென்னி பெஹனன்
▪️ வி.கே.ஸ்ரீகண்டன்
▪️ முகமது ஜாவேத்
▪️ டி.என்.பிரதாபன்
▪️ டீன் குரியகோஸ்
▪️ ரம்யா ஹரிதாஸ்
▪️ ஹைபி ஈடன்
▪️ டெரிக் ஓ பிரையன்

இதில் ஒன்பது பேர் காங்கிரஸையும், இருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், இருவர் திமுகவையும், ஒருவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

You may also like

Leave a Comment

seventeen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi